Archives: அக்டோபர் 2021

காலங்களை மீட்டெடுத்தல்

பருவகாலத்தைமீட்பதற்கான வழியை கண்டுபிடிக்க லெய்சா விரும்பினாள். ஆகையினால் அவள் கண்காட்சியில் பார்த்த பெரும்பாலான அலங்காரங்கள் பயங்கரமான மற்றும் கொடூரமான வழிகளில் மரணத்தை கொண்டாடுவதாக காணப்பட்டது. 

அந்த மரண இருளை சுலபமான வழியில் எதிர்கொள்ள எண்ணிய லெய்சா, ஒரு பூசணிக்காயை எடுத்து அதில் அழியாத எழுதுகோலினால் எழுத ஆரம்பித்தாள். “சூரியஒளி” என்று முதலில் எழுதினாள். பார்வையாளர்கள் தொடர்ந்து அதில் எழுத ஆரம்பித்தனர். சிலர் விசித்திரமான காரியங்களையும் அதில் எழுதினர்: உதாரணத்திற்கு “கிறுக்குதல்” போன்ற வார்த்தைகள். சிலர் நடைமுறைக் காரியங்களையும் எழுதினர்: “அழகான வீடு,” “ஓடும் கார்.” மரித்த தங்களுடைய நேசத்திற்குரிய நபர்களின் பெயர்களையும் எழுதி சிலர் தங்கள் வருத்தத்தையும் தெரிவித்திருந்தனர். அந்த பூசணிக்காயைச் சுற்றி மக்களின் நன்றியுணர்வு என்னும் சங்கிலி தொடர ஆரம்பித்தது. 

நாம் எளிதில் பார்வையிடக்கூடிய வாழ்க்கையின் காரியங்களைக் குறித்து சங்கீதம் 104 தேவனுக்கு நன்றி சொல்லுகிறது. “அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்” என்று சங்கீதக்காரன் பாடுகிறார் (வச. 10). “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (வச. 14). இருளையும் நன்மையாகவும் நோக்கத்தோடும் சிருஷ்டித்ததாக அறிவிக்கிறார். “நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும் ; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்” (வச. 20). அதற்கு பின்பாக, “சூரியன் உதிக்கையில்... அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்” (வச. 22-23). கடைசியாக இவைகள் எல்லாவற்றிற்காகவும், “நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்று முடிக்கிறார். 

மரணத்தை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாத இந்த உலகத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்காக நாம் சிருஷ்டிகருக்கு நன்றி சொல்லி பழகும்போது ஒரு நம்பிக்கையை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

புதிய அழைப்பு

ஒரு அடாவடி இளைஞர் கும்பலின் தலைவன் கேசியும் அவனுடைய கூட்டமும் வீடுகள், கார்கள், கடைகள் என்று கொள்ளையடிப்பதையும் மற்ற அடாவடி கும்பலுடன் சண்டையிடுவதையுமே வாடிக்கையாய் கொண்டிருந்தனர். அதின் விளைவாய் கேசி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். அங்கே சிறைக் கலவரத்தின்போது கத்திகளை விநியோகித்த நபராய் மாறினான். 

சில நாட்களுக்கு பின் தனி சிறையில் அடைக்கப்பட்டான். ஓரு நாள் அவனுடைய அறையில் கனவு காணும்போது, அதில் அவனுடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும், இயேசு சிலுவையிலறையப்படுதலையும், அத்துடன் இயேசு இவனைப் பார்த்து “இதை உனக்காகவே செய்தேன்” என்று சொல்லுவதாகவும் கண்டான். கண்டமாத்திரத்தில், தரையில் முகங்குப்புற விழுந்து, தன் பாவத்தை அறிக்கையிட்டு அழ ஆரம்பித்தான். பின்பாக ஒருநாள் அதை அங்கிருந்த சிற்றாலய ஊழியரிடம் சொல்ல, அவர் அவனுக்கு இயேசுவைக் குறித்து சொல்லி, வேதாகமத்தை பரிசாகக் கொடுத்தார். “அது தான் என்னுடைய விசுவாச பயணத்தின் துவக்கம்” என்று கேசி சொல்லுகிறான். அவனுடைய தனிமையான சிறையிலிருந்து மீண்டும் பிரதான சிறைக்கு மாற்றப்பட்டான். அங்கே அவனுடைய விசுவாசத்தினிமித்தம் தவறாக நடத்தப்பட்டாலும், அங்குள்ள மற்ற கைதிகளுக்கு இயேசுவைக் குறித்து சொல்லுவதின் மூலம் தான் புதிய அழைப்பைப் பெற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடைந்தான்.

தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபத்தில், வாழ்க்கையை மாற்றும் கிறிஸ்துவின் வல்லமையைக் குறித்து பேசுகிறார்: பாவ வாழ்க்கையிலிருந்த நம்மை தேவன் அழைத்து கிறிஸ்துவை பின்பற்றவும் அவருக்கே ஊழியம் செய்யும்படியாகவும் ஏற்படுத்துகிறார் (2 தீமோத்தேயு 1:9). அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொண்டால், கிறிஸ்துவின் அன்பின் ஜீவனுள்ள சாட்சிகளாய் நாம் மாறுகிறோம். உபத்திரவத்தின் மத்தியிலும் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார் (வச.8). கேசியைப் போலவே நம்முடைய புதிய அழைப்பின் ஜீவியத்தை வாழுவோம். 

நம்மேல் தேவனின் களிகூறுதல்

எங்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்து பதினேழு மாதங்கள் கழித்து பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பெண் குழந்தையைக் குறித்து நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் ஆண் குழந்தையை பராமரிப்பது குறித்து எனக்கு ஓரளவு தெரியும், பெண் குழந்தையைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதினால் எனக்கு சிறிய தயக்கம் இருந்தது. நாங்கள் அவளுக்கு சாரா என்று பெயரிட்டோம். அவளைத் தூங்க வைக்கும் பொறுப்பை நான் ஏற்றதால் என் மனைவி சற்று ஓய்வெடுத்தார். ஏன் என்று தெரியவில்லை, ஆனால் அவளை தூங்கப்பண்ணும்பொருட்டு நான் “நீரே என் சூர்யோதயம்” என்ற பாடலை தேர்ந்தெடுத்து பாடினேன்.அவளை என் தோள்மீது போட்டுக்கொண்டு அப்பாடலை ரசித்துப் பாடினேன். தற்போது அவளுக்கு 20 வயதாகிறது. இன்னும் அவளை சூர்யோதயம் என்றே அழைப்பது வழக்கம்.

நாம் தூதர்கள் பாடி களிகூருவார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் தேவன் களிகூர்ந்தார் என்பதை நீங்கள் கடைசியாய் கேள்விப்பட்டது எப்போது? அதிலும் அவர் உங்களைக் குறித்து களிகூர்ந்தார் என்பதை எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா? எருசலேமுக்கான செப்பனியாவின் செய்தியில், “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார் ; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (3:17) என்று கூறுகிறார். இது எருசலேமுக்கு உரைக்கப்பட்ட செய்தியாயினும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம் பேரிலும் தேவன் கெம்பீரமாய் களிகூருவார். அவர் எந்த பாடலைப் பாடுவார்? வேதம் அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் அந்த பாடல் நிச்சயமாய் அவருடைய அன்பிலிருந்தே உதயமாகும். எனவே அதை உண்மையானது, ஒழுக்கமானது, நீதியுள்ளது, கற்புள்ளது, அன்புள்ளது மற்றும் நற்கீர்த்தியுள்ளது என்று நம்பலாம் (பிலிப்பியர் 4:8).

தேவன் கேட்கிறாரா?

எங்களுடைய திருச்சபை ஆராதனைக் குழுவில் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய வேலை என்னவெனில், ஆராதனை நேரத்தில் அட்டைகளில் எழுதிக் கொடுத்த ஜெபக்குறிப்புகளுக்காய் நாங்கள் ஜெபிக்கவேண்டும். அத்தையின் சுகத்திற்காக, தம்பதியினரின் பணத்தேவைக்காய், தன் பேரப்பிள்ளை தேவனை அறிந்துகொள்வதற்காய் என்று எழுதப்பட்டிருக்கும். இந்த ஜெபத்திற்கான பதில்களைக் குறித்த சாட்சிகளை நான் அரிதாகவே கேட்க நேர்ந்தது. அதிலும் பெரும்பாலும் யார் என்றும் என்ன விண்ணப்பம் என்றும் எனக்கு தெரிவதில்லை. தேவன் அவர்களுக்கு எப்படி பதில்கொடுக்கிறார் என்பதைக் குறித்து எனக்கு தெரியவில்லை. சில வேளைகளில், அவர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா? என் ஜெபத்தின் விளைவாய் ஏதாகிலும் பலன் இருக்கிறதா? என்று நானே கேட்டுக்கொள்வேன்.

நம்மில் அநேகர், “கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்கிறாரா?”என்ற கேள்வியை வாழ்நாளில் பலமுறை கேட்டிருக்கிறோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அன்னாளைப்போல பிள்ளைக்காய் தேவ சமூகத்தில் விண்ணப்பித்து, ஆண்டுகளாய் என் விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. ஆயினும் என்னுடைய விண்ணப்பத்தில் என் தந்தை தேவனை விசுவாசிக்க துவங்கினார். எனினும் அதை வெளிப்படையாய் பிரதிபலிக்காமல் இறந்துவிட்டார். 

நூற்றாண்டுகளாய் நடந்தேறிய வேதத்தின் சம்பவங்களில் தேவன் பல விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்துள்ளார்: இஸ்ரவேல் அடிமைத்தனத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிட்டபோது (யாத். 2:24) ;சீனாய் மலையில் மோசேக்கு (உபாகமம் 9:19) ; கில்காலில் யோசுவாவுக்கு (யோசுவா 10:14) ; பிள்ளைக்கான அன்னாளின் வேண்டுதலின் போது (1 சாமுவேல் 1:10-17) ; சவுலிடத்திலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு தாவீது விண்ணப்பித்தபோது (2 சாமுவேல் 22:7) என்று பல விண்ணப்பங்களுக்கு தேவன் பதிலளித்துள்ளார். 

1 யோவான் 5:14ன்படி, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார். செவிகொடுக்கிறார் என்றால், கூர்ந்து கவனித்து கேட்டதற்கேற்றபடி பதில் கொடுக்கிறார் என்று அர்த்தம். 

கர்த்தர் செவிகொடுக்கிறவர் என்று சரித்திரத்தில் தேவ ஜனத்திற்கு இருந்த நம்பிக்கையை இன்று நாம் தேவ சமுகத்திற்கு போகும்போது தரித்துக்கொள்வோம். அவர் நம் விண்ணப்பத்திற்கு செவிகொடுக்கிறவர். 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.